தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 30 பேர் காயம்
விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.;
விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம், ஆக.13-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு புதுச்சேரிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர். விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே அரியலூர் திருக்கை என்ற இடத்தில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராதவிதமாக அங்குள்ள சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த கெடார் போலீசார், பொதுமக்கள் உதவியுடன், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுமார் 30 பயணிகள் லேசான காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.