பென்னாகரம் பகுதியில்3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள்அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
பென்னாகரம் பகுதியில் பருவதனஹள்ளி புதூர், சந்தைப்பேட்டை மற்றும் ஏர்ரகொல்லனூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவுத்துறையின் சார்பாக புதிய பகுதி நேர ரேஷன் கடைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
ரேஷன் கடைகள் திறப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பருவதனஹள்ளி புதூர், சந்தைப்பேட்டை மற்றும் ஏர்ரகொல்லனூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவுத்துறையின் சார்பாக புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு விழாக்கள் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஜி.கே. மணி வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாக்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 3 புதிய பகுதிநேர ரேஷன் கடைகளை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், பென்னாகரம் தாலுகா பருவதனஹள்ளி முழுநேர ரேஷன் கடையில் 703 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அதிலிருந்து பிரித்து பருவதனஹள்ளி புதூர் பகுதியில் 101 குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர ரேஷன் கடை தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மூங்கில்மடுவு முழுநேர ரேஷன் கடையில் 708 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.அதிலிருந்து பிரித்து சந்தைப்பேட்டை பகுதியில் 96 குடும்ப அட்டைகள் கொண்ட பகுதி நேர ரேஷன் கடையும், ஏரிக்கரைசந்து முழுநேர ரேஷன் கடையில் 463 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அதிலிருந்து பிரித்து ஏர்ரகொல்லனூர் பகுதியில் 156 குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர ரேஷன் கடையும் என மொத்தம் 3 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த பகுதி நேர ரேஷன் கடைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தரமான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்..
புதிய பஸ் நிலைய பணி
இதனைத் தொடர்ந்துபென்னாகரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த புதிய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள், எத்தனை பஸ்கள் நிறுத்துவதற்கு இடம் உள்ளது. பயணிகள் நிழற்குடை, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சர் இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தி.மு.க. வர்த்தகரணி மாநில துணைச் செயலாளர் தர்மச்செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத் தலைவர் வள்ளியம்மாள், தாசில்தார் பென்னாகரம் சவுகத் அலி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.