பள்ளிபாளையத்தில்இளம்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2023-01-25 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்சாமி (32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் தனது மகள் சாவுக்கு கணவர் ராகவேந்திரன் சாமி மற்றும் அவர்களின் தந்தை, தாய் மற்றும் நாத்தனார் காரணம் என கூறினர்.

பேச்சுவார்த்தை

மேலும் அவர்கள் நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த அபிராமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி மற்றும் உதவி கலெக்டர் கவுசல்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதற்கிடையே அபிராமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்