கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும்

மயிலாடுதுறை நகரில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2023-04-06 18:45 GMT

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கசடு, கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு நகராட்சியிடம் இருந்து உரிமம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு, கழிவு நீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000 ஆகும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும், கோர்ட்டு மூலம் வழக்குப்பதிவு செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்