சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ கோர்ட்டு தீ்ர்ப்பு வழங்கியது.

Update: 2022-08-27 08:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த சுண்ணாம்பு குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 26). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரசாந்த் மீது செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி தீர்ப்பு வழங்கினார்.

அதில் போக்சோ சட்டத்தின் படி ஒரு ஆயுள் தண்டனையும், மற்ற 2 பிரிவுகளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து இவை அனைத்தும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்