மின்சாரம் தாக்கி மாணவன் பலி

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி கோவில் திருவிழாவில் பரிதாபம்

Update: 2023-06-07 18:45 GMT

பிரம்மதேசம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள பந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகன் நித்திஷ்குமார்(வயது 12). இவன் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போதுஅந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நித்திஷ்குமார் மற்ற சிறுவர், சிறுமியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திருவிழாவுக்காக மின் விளக்கு கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியை தொட்டான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவணிப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நித்திஷ்குமார் பரிதாபமாக இறந்தான். இதுபற்றிய தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்