அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-03-19 18:45 GMT

குருபரப்பள்ளி

கழுத்தை அறுத்து கொண்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 24). இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று காலை சதீஷ் வீட்டில் இருந்த கத்தியால் கை, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே உயர் மின்னழுத்த கோபுரத்தில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த வாலிபர் மருத்துவமனையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்