அரசு மருத்துவமனையில் கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சூர்யா மற்றும் அவர் நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக உறுதிப்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ளே புகுந்து செய்யப்பட்ட இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.
தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.
வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?
துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதல்-அமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என அதில் பதிவிட்டுள்ளார்.