டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

Update: 2022-07-17 15:02 GMT

பாணாவரம் அருகே டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக பெங்களூருவில் இருந்து வேடந்தாங்கல் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர்.

இதில் பெங்களூருவில் இருந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுத்துக் கொண்டு வேடந்தாங்கலில் இருந்து பாணாவரம் சென்றுள்ளனர். மீண்டும் பாணாவரத்தில் இருந்து மகேந்திரவாடி வழியாக வேடந்தாங்கல் நோக்கி காரில் வந்தனர். அப்போது வேடந்தாங்கல் அருகே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பாணாவரம் அடுத்த கோபாலபுரம் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (வயது 20) பெங்களூருவை சேர்ந்த அருண்குமார் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மூர்த்தி (22) சதீஷ் (25) சரவணகுமார் (24) ஏழுமலை (25) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 4 பேரும் வேலூர் அடுக்குமறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேடந்தாங்கல் கிரமத்தில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்