முதுகுளத்தூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா...!
முதுகுளத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கே.ஆர் பட்டினம் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கே.ஆர் பட்டினம் கிராமத்தில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போது கண்மாயில் நீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கே.ஆர் பட்டினம் கிராமத்திலுள்ள சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, தூரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.
அப்போது பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, அயிரை விரால், கட்லா ஆகிய மீன் வகைகள் கிடைத்தன.
இதனை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.