ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தங்குதடையின்றி வினியோகம் -அமைச்சர் சக்கரபாணி அறிக்கை
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.;
சென்னை,
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்திடவும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் 10-ந்தேதி அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து, என் தலைமையிலும் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் விலைக் கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் 11-ந்தேதி நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வர்த்தகம்-தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத் திட்டம், துணிநூல் துறை மந்திரிக்கு தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் டன் கோதுமை மற்றும் 10 ஆயிரம் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்திடக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
பாமாயில் வினியோகம்
விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40 ஆயிரம் டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த கிடங்குகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி
தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60 விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) முதல் சென்னையில் 7 அமுதம் அங்காடிகளிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 7 ரேஷன் கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60-க்கும், துவரம் பருப்பு அரை கிலோ ரூ.75-க்கும், உளுந்தம் பருப்பு அரை கிலோ 60-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இதற்குத் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாகவும் இன்றியமையாப் பொருள்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க மேற்குறிப்பிட்டவாறு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.