மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.;
ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி, சம்பை கிராமத்தில் வருவாய்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தேடி வந்த நிலை மாறி மாவட்ட நிர்வாகமே மக்களைத் தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றன. அந்த வகையில் இப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 68 பேருக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வரபெற்ற 184 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம். தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயன் அடைந்திட வேண்டும். இவ்வாறு பேசினார். முகாமில் மொத்தம் 68 பயனாளிகளுக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, யூனியன் தலைவர் பிரபாகரன், தாசில்தார் சுரேஷ் குமார், ஊராட்சி தலைவர் ஹேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.