3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை

நிலக்கோட்டை அருகே கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால், 3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-31 14:27 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் (வயது 42). இவர், நிலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி லட்சுமி (வயது 39). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவனத்தில், குடும்பம் நடத்தும் அளவுக்கு போதுமான சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வருமானத்தை வைத்து 3 குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது, எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்பது குறித்து லட்சுமி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அவர், கடந்த 27-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த சர்வேஸ்வரன், லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக லட்சுமி, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 3 மகள்களை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்