ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை - டிரம்ப் பேட்டி

ஈரானில் நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-27 23:15 GMT

டோக்கியோ,

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது முதல், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்ததோடு, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மேலும், ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஈரான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், “நாங்கள், ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அந்நாட்டில் அணுஆயுதங்கள் இல்லாது இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்பதை தெளிவுபடுத்த கடைமைப்பட்டுள்ளேன்.

ஈரானை காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இருதரப்பு இடையே ஒருமித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால், நாங்களும் தயாராக இருக்கிறோம்” என கூறினார்.

மேலும் செய்திகள்