உளவு பார்த்த 2 அதிகாரிகள் வெளியேற்றம்: இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

உளவு பார்த்த 2 தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை பாகிஸ்தான் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

Update: 2020-06-01 23:45 GMT
இஸ்லாமாபாத், 

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாக நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர்.

பிடிபட்டதும் அபித் உசேனும், முகமது தாகிரும் தாங்கள் இருவரும் இந்தியர்கள் என்று கூறி ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால் அந்த அட்டைகள் போலியானவை என்று தெரியவந்தது.

பின்னர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உத்தரவின் பேரில் உளவு பார்த்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, உளவு பார்த்த அந்த இரு அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் தங்கள் தூதரக அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இந்திய அரசு இப்படி செயல்படுவதாகவும் பாகிஸ்தான் கூறியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேற்று அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது. உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், தூதரக உறவு தொடர்பான வியன்னா மாநாட்டு தீர்மானத்துக்கு விரோதமானது என்றும் கூறி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரையும் அங்கிருந்து வெளியேற்றியது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில், உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஆனால் இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை.

மேலும் செய்திகள்