ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றிய சோமாலியாவின் மனித நேய ஆர்வலர் மரணம்

ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றிய சோமாலியாவின் மனித நேய ஆர்வலர் மரணம் அடைந்தார்.

Update: 2020-08-06 22:15 GMT
மொகாதிசு, 

வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் உருக்குலைந்து போன ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73).

இவர் தலைநகர் மொகாதிசுவுக்கு அருகே ஒரு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், உணவு மையத்தை அமைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வந்தார். உள்நாட்டுப்போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கினார்.

சோமாலியாவில் 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரிலும் அங்கே இருந்து, தனது சேவைகளால் மக்களைக் கவர்ந்து, சோமாலியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர்.

அவர் நேற்று முன்தினம் மொகாதிசுவில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மகள் ஆமினா அப்தி இதை உறுதி செய்தார். சோமாலியா செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட சோமாலியா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆஸ்பத்திரியை நிறுவி சேவை செய்தார்” என கூறி உள்ளது. 2012-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்