பில் கேட்ஸ் தம்பதியின் விவாகரத்து இறுதியானது; அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியீடு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவின் விவாகரத்து முடிவு இறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-08-03 07:30 GMT



நியூயார்க்,

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ்.  இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.  இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.  இதுபற்றி கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது.

இதுபற்றி பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம்.  உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன.

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம்.  எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில், ஒன்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி காணுவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார்.  பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.

அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்த பின், பில் கேட்ஸ், ஹவாயில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.  லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்நிலையில், இருவரும் விவாகரத்து செய்யும் முடிவு பற்றி அறிவித்தனர்.

இந்த விவாகரத்துக்கான மனுவை வாஷிங்கடன் நகரில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டில் மெலிண்டா கேட்ஸ் தாக்கல் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து இருவரின் விவாகரத்து இறுதி செய்யப்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்