கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி

கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-20 20:31 GMT
கோப்புப்படம்
கொழும்பு, 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 மீனவர்கள் கடந்த 18-ந்தேதி இரவில் வங்ககடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களது படகை கப்பலைக்கொண்டு மோதி மூழ்கடித்தனர்.

இதனால் கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்கள் 3 பேரில் சுகந்தன், சேவியர் இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். அவர்களை சிறைப்பிடித்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ராஜ்கிரண் மட்டும் மாயமானார். இந்த நிலையில் கடலில் மூழ்கி பலியான மீனவர் ராஜ்கிரணின் உடலை மீட்டதாக இலங்கை கடற்படை நேற்று செய்தி வெளியிட்டது. அதேநேரம் இது குறித்து கூடுதல் விவரம் எதுவும் இலங்கை கடற்படை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்