கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - பொதுமக்கள் பலர் பலி?

கலிபோர்னியாவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-03 12:34 GMT
சேக்ரமென்டோ,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமென்டோவில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாக்ரமெண்டோ நகரின் 10வது மற்றும் ஜே ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக சாக்ரமெண்டோ போலீஸ் செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் சாக் ஈடன் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் உடனடியாக தெரியவில்லை.

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் துப்பாக்கியால் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கிறது. பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தெருவில் சிதறி ஓடுகின்றனர். அதையடுத்து அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருகிறது.

அந்த பகுதியில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், பொதுமக்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்