கிரீஸ்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-02-06 06:27 GMT

ஏதேன்ஸ்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் கிரீஸ் நாட்டிற்குள் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கீரிஸ் நாட்டின் லிரொஸ் தீவுக்கூட்டம் அருகே வந்தபோது கடற்பாறைகள் மீது மோதி படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், படகு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அகதிகளை தங்கள் நாட்டிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக துருக்கி அனுப்பி வைப்பதாக கிரீஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்