போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவை குறிவைத்து தாக்குதல்: 5 போலீசார் பலி

போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவிற்கு பாதுகாப்பாக போலீசார் சென்றனர்.

Update: 2024-01-08 07:55 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பஜார் மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக இன்று காலை மருத்துவக்குழுக்கள் சென்றன. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலீசார் சென்றனர். அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து மர்ம நபர்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர்.

இந்த குண்டு வெடிப்பில் 5 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவத்தால் அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்