வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி..!

வங்கதேசம் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்து 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்று தகவல்.

Update: 2023-07-17 07:04 GMT

படம் : Reuters

டாக்கா,

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள புரிகங்கா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிறு இரவு 8:15 மணி அளவில் டாக்காவின் சதர்க்காட்டில் இருந்து டெல்காட் நோக்கி சென்று கொண்டிருந்த படகு மணல் திட்டு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் கடலோர காவல் படையின் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் தற்போது வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 1 குழந்தை உட்பட 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற முழு விவரம் தெரியாததால் மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களை கண்டறிந்து ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்