'இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம்' - வழக்கறிஞர் அச்சம்

சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-04 09:19 GMT

இஸ்லாமபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'தோஷகானா' ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 70 வயதாகும் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, அவரை சிறையில் சென்று சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, இம்ரான் கானின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார். இம்ரான் கானின் உணவில் நஞ்சு கலந்து கொடுக்கப்படலாம் என அச்சம் தெரிவித்த அவர், சிறையில் இம்ரான் கான் மனரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இம்ரான் கானின் நடமாட்டத்தை சிறை அதிகாரிகள் தடுப்பதாகவும், சிறிய அறைக்கு அவரை மாற்றி உள்ளதாகவும் கூறிய நயீம், சிறையிலேயே இம்ரான் கானை கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஸ்ரா பீவி கவலை தெரிவித்ததாக கூறினார். மேலும் இம்ரான் கானின் நிலை குறித்து இஸ்லாமாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக நயீம் பஞ்சுதா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்