ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.

Update: 2023-10-19 21:52 GMT

Image Courtacy: PTI

கொழும்பு,

நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால் கடும் கொந்தளிப்புக்கு ஆளான இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் பல மாதங்களுக்கு நீடித்தது. உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.

அதிபர் மாளிகையில் இருந்த ரூ.1.70 கோடி

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனிடையே அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பல நாட்கள் அங்கு தங்கியிருந்த போராட்டக்காரர்கள் அங்கு ரூ.1 கோடியே 70 லட்சத்தை கண்டெடுத்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து அதிபர் மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

ஊழல் வழக்கு கைவிடப்பட்டது

கொழும்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதனிடையே கோத்தபய ராஜபக்சே அந்த பணம் தன்னுடையது என்றும், அதை திருப்பி தரும்படியும் கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் கோர்ட்டு அதை நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கை கைவிடுவதாக இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று அறிவித்தது.

கோத்தபய ராஜபக்சே மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக கொழும்பு கோர்ட்டில் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்