வசந்தம் வீச வைக்கும் வைகாசி திருநாள் : 28-5-2018 வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது.

Update: 2018-05-23 04:55 GMT
வைகாசி  மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

‘வி' என்றால் ‘பட்சி' (மயில்), ‘சாகன்' என்றால் ‘சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்' என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக் கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

இந்த நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைப்பதுடன், எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெ றும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை

வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்த லங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர் களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம்கிடைக்கும் என்பது ஐதீகம். 

பலவித முருகன்

கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடு மலைப்பேட்டை சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

திருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் கந்தக் கடவுள்.

திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் திருத்தலம். இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே தோற்றத்தில் அருள்கிறார்.

பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும். ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

பரிகாரங்கள்

மனித வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. எல்லோரும் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் இருந்து விடுவதில்லை. துன்பத்தில் சிக்கி அல்லல்படுவதும் இல்லை. இன்பத்தையும், துன்பத்தையும் மாறி, மாறி அனுபவிப்பதே மனிதவாழ்வு. ஆனால் துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.

துன்பங்கள் நீங்க..

ஏதாவது ஒரு வளர்பிறை செவ்வாய்க் கிழமை அன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பசுவுக்கு வாழைப் பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை நீங்கும். செல்வ நிலை உயரும்.

தொழில் விருத்தியாக..

கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சைப் பழம் ஒன்று வாங்கி, கடை மற்றும் அலுவலகம் முழுவதும் சுற்றி விட்டு, வெளியில் நின்று நான்கு துண்டாக நறுக்கி, தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். இவ்வாறு செய்வதால், கடை மற்றும் அலுவலகத்தில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது நல்லது.

திருமணத்தடை விலக..

திருமணத்தடை இருப்பவர்கள், நல்லெண்ணெய் தேய்த்தும், கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்தும் குளிக்கவும். பின்னர் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். வறுமை நீங்குவதற்கும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் கூட இதைச் செய்யலாம். ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தைச் செய்யவும்.

மேலும் செய்திகள்