லிங்கத்தில் யானை உருவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகில் உள்ளது அத்திமுகம் என்ற ஊர்.

Update: 2018-05-23 08:34 GMT
இங்குள்ள ஐராவதீஸ்வரர் கோவிலின் கருவறையில் அருள்பாலிக்கும் லிங்கத் திருமேனியில் யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஐரா வதம் யானை, இத்தல இறைவனை வழிபட்டதால், அந்த யானையின் முகம் சிவலிங்கத்தின் மீது பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.

முருகருக்கு சிம்ம வாகனம்

சென்னை அருகே உள்ள பொன்னேரி அடுத்துள்ளது ஆண்டார்குப்பம். இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, அதிகாரத் தோரணையுடன் இருப்பது போல் காட்சி தருகிறார். இடுப்பில் கை வைத்திருப்பது போல் அருளும் இந்த முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றங்களில் ஒருவராக திகழ்கிறார். பொதுவாக முருகப்பெருமானுக்கு மயில்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் சிம்ம வாகனம் மயிலைத் தாங்கியபடி இருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.


மிளகாய் வற்றல் மாலை

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம் என்ற இடத்தில் பிரத்யங்கிரா தேவி ஆலயம் இருக்கிறது. இந்த அன்னைக்கு மிளகாய் வற்றல் கொண்டு மாலை தொடுத்து சாத்தி வழி படுகிறார்கள். அத்துடன் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றியும் தங்களது வேண்டுதலைச் சொல்லி தரிசனம் செய்கிறார்கள்.


பெண் வடிவில் கருடன்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தில் பெண் வடிவில் கருட பகவான் இருந்து அருள்பாலிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாக பார்க்கப்படுகிறது.


மூன்று முக தேவி

ஹரித்துவாரில் உள்ள பிர்வபர்வதத்தில் மானசாதேவி கோவில் அமைந்துள்ளது. நினைத்ததை நடத்தித் தருபவள் இந்த அன்னை. பிர்வபர்வதத்தின் உச்சியிலிருந்து ஹரித்துவாரின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். மானசாதேவி ஒரு வடிவமாக மூன்று முகங்களுடன் காட்சியளிக்கிறார். பார்வதி, சரஸ்வதி, லட்சுமி என மூன்று முகத்தோற்றம் இந்த அன்னைக்கு. இங்கே வரும் பக்தர்களுக்கு, பொட்டு வைத்து, முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார் அர்ச்சகர்.

மேலும் செய்திகள்