மகாநந்திக்கு 2 டன் காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்காரம்

மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது.

Update: 2023-01-16 21:19 GMT

தஞ்சாவூர்;

மகர சங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

மகரசங்கராந்தி விழா

இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திெயம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.இந்த நந்திெயம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.

2 டன் காய்கறி, இனிப்புகள்

காலையில் நந்திெயம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பலவகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்திெயம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது.

108 கோ பூஜை

இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ பூஜை செய்தனர். பக்தர்களுடன், பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீசாரும் கோ பூஜை செய்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மகரசங்கராந்தி விழா எளிமையான முறையில் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு இல்லாததால் பிரமாண்ட முறையில் நந்திக்கு 2 டன் காய்கறி, இனிப்புகள் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ-பூஜை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்