விநாயகர் சதுத்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம்
விநாயகர் சதுத்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
வெள்ளி யானை வாகனத்தில் யானை தந்தத்துடன் சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகர்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கற்பகவிநாயகரை வரவேற்று பெண்கள் வண்ண பூக்கோலமிட்டனர்.
திருப்பத்தூர்:
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி இந்தாண்டு இந்த விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி 2 ஆம் நாள் திருவிழா முதல் 8 ஆம் நாள் திருவிழா வரை தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷிப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 6 ஆம் திருவிழாவான இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக வெள்ளி யானை வாகனத்தில் யானை தந்தத்துடன் எழுந்தருளி கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் கிழக்கு கோபுரம் வழியாக வந்து கோவில் வீதியை சூரனுடன் சுற்றி வந்து கோவில் தெப்பக்குளம் எதிரே சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கற்பக விநாயகரை வரவேற்று பெண்கள் வண்ண கோலமிட்டனர்.