20 ஓவர் கிரிக்கெட் போட்டி: அசத்தும் ரோகித் சர்மா

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் மற்றும் அதிக வெற்றிகளை குவித்து அசத்தி வருகிறார்.

Update: 2019-02-08 13:46 GMT
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்கள் விளாசினார் .இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-1 என்ற கணக்கில் இருஅணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்தப் போட்டியில் 50 ரன்கள் அடித்த ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை 20 ஓவர் போட்டிகளில் 92 போட்டிகள் விளையாடியுள்ள ரோகித் 2,288 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2,272 ரன்களுடன் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சோயிப் மாலிக் 2,263, விராட் கோலி 2,167, பிரண்டன் மெக்கல்லாம் 2,140 ரன்களுடன் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

இன்றையப் போட்டியில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம், 20 ஓவர் போட்டியில் 100 சிக்ஸர்களை கடந்துள்ளார். இதுவரை மொத்தம் 102 சிக்ஸர்கள் அடித்து, குப்தில் அடித்ததை சமன் செய்து இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 103 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இன்றுடன் சேர்த்து மொத்தம் 16 அரைசதங்கள் அடித்துள்ளார். 

மேலும் 4 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
  
இது மட்டுமல்லாது மொத்தம் 20 ஓவர் போட்டியில் 14 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள ரோகித், அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், 20 போட்டிகளில் கேப்டனாக இருந்தே விராட் கோலி 12 வெற்றிகளை பதிவு செய்தார். இதற்கு முன்பாக, மைக்கேல் கிளார்க், சர்ஃப்ராஸ் அகமது ஆகியோர் 14 போட்டிகளில் 12 போட்டியில் வெற்றியை பெற்று தந்துள்ளனர்.

மேலும் செய்திகள்