து ளி க ள்

உலக கோப்பை வில்வித்தை போட்டி (4–ம் நிலை) ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது.

Update: 2018-07-21 20:45 GMT

உலக கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

உலக கோப்பை வில்வித்தை போட்டி (4–ம் நிலை) ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோதி சுரேகா, திரிஷா, முஸ்கன் கிரர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 228–229 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் பிரான்ஸ் குழுவினரிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி பட வேண்டியதாயிற்று. முன்னதாக அரைஇறுதியில் முன்னணி அணியான துருக்கிக்கு, இந்திய அணி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. காம்பவுண்ட் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஜோதி சுரேகா– அபிஷேக் ஜோடி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஜாம்ஷெட்பூர் அணிக்கு புதிய பயிற்சியாளர்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்கான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் சீசர் பெர்னாண்டோ ஜிமினெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஸ்பெயின் கால்பந்து பாணியை புகுத்த இருப்பதாக அவர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

சஹாவுக்கு ‘ஆபரே‌ஷன்’ உறுதி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலேயோ வலது தோள்பட்டை காயத்துக்கு இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் ஆபரே‌ஷன் நடக்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் அடுத்த சில மாதங்கள் விளையாட முடியாது.

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்தியா மீண்டும் வெற்றி

நியூசிலாந்து ஆண்கள் ஆக்கி அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் ரூபிந்தர் பால்சிங் (18-வது நிமிடம்), சுனில் (27-வது நிமிடம்), மன்தீப்சிங் (56-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்