இளைஞர் ஒலிம்பிக் போட்டி பளுதூக்குதலில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றார்
இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
பியூனோஸ் ஏர்ஸ்,
அர்ஜெண்டினா நாட்டில் நடந்து வரும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரேமி லால்ரினங்கா கலந்து கொண்டார்.
அவர் மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி முதல் இடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் துருக்கி நாட்டின் டாப்டாஸ் கேனர் 263 கிலோ (122 மற்றும் 141) எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இதேவேளையில், கொலம்பியா நாட்டின் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார்.
மிசோராமின் எய்சவால் நகரை சேர்ந்த லால்ரினங்கா உலக இளைஞர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்.
இந்த வருடம் தொடக்கத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வெள்ளி (இளைஞர்) மற்றும் ஒரு வெண்கலம் (இளையோர்) என 2 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் இரண்டு தேசிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.