ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்குதல் வீரர் ரவிக்குமாருக்கு 4 ஆண்டு தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்குதல் வீரர் ரவிக்குமாருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-05 23:34 GMT
புதுடெல்லி,

2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதல் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர், இந்திய வீரர் ரவிக்குமார் கட்லு. அதன் பிறகு 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

போட்டி இல்லாத காலத்தில் இவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ‘ஆஸ்ட்டரின்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. ஆஸ்ட்டரின் வகை மருந்து தசையை வலுப்படுத்த உதவக்கூடியது.

இதையடுத்து 31 வயதான ரவிக்குமாருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பூர்னிமா பாண்டே, ஹிரேந்திர சராங், தீபிகா ஷிரிபால், கவுரவ் தோமர் ஆகியோரும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் கோட்டா பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை இந்திய பளுதூக்குதல் சம்மேளன செயலாளர் சதேவ் யாதவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஊக்கமருந்து தடுப்பு விதிமுறை மீறலை பொறுத்தவரை, சர்வதேச போட்டிகளின் போது உலக ஊக்கமருந்து தடுப்பு கழகம் நடத்தும் சோதனையில் சிக்கினால் தான் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சர்வதேச போட்டி என்று வரும் போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் நடவடிக்கை பொருந்தாது. அதனால் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியாவின் கோட்டாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்றார். இந்த ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியா சார்பில் 2 வீரர், 2 வீராங்கனையை அனுப்ப முடியும்.

மேலும் செய்திகள்