“கிணறு” படத்தை பாராட்டிய நடிகர் ஜீவா
ஹரி குமரன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் நடித்துள்ள “கிணறு” படம் கடந்த 14ம் தேதி வெளியானது.;
இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிணறு’ எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கௌதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
‘கிணறு’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும், விருதையும் வென்றது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிராமத்து சிறார்களின் நாளாந்த வாழ்வியலில் இடம் பிடிக்கும் கிணறு தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமானதாக இருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
படத்தின் திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு காட்சி நடைபெற்றது. இதில் ஜீவா, சீனு ராமசாமி, வைபவ், வினய், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ஜீவா பேசுகையில், “உண்மையிலேயே படக்குழு பயங்கரமான உழைப்பை போட்டுருக்காங்க. நல்ல பீல் குட் படம். ஒரு இரானியன் படம் பார்த்த உணர்வு இருந்துச்சு. நிறைய இடத்துல எனக்கே தெரியாம அழுதுட்டேன். படத்துல நடிச்சவங்க எல்லாமே முதல் தடவை நடிச்சாலும் கேமரா கூச்சமே இல்லாம ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்த படம் எல்லாருக்குமே பிடிக்கும். குறிப்பா படத்துல ஒரு பாட்டி வராங்க, அவங்க சூப்பரா நடிச்சிருக்காங்க. இந்தப்பட டைரக்டர் தமிழ்நாட்டுல ஒரு குக் கிராமத்து வாழ்வியல ரொம்ப அழகா காமிச்சிருக்காரு.எல்லாருமே பார்க்க வேண்டிய படம், ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு என்ஜாய் பன்னேன். இயற்கை ரசிக்கிற மாதிரி இந்த சினிமா இருந்துச்சு” என்றார்.