"கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம்
50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.;
தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி (வயது 87) காலமானார். பெங்களூரில் உள்ள இல்லத்தில் காலமான சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம் குறித்த விவரங்கள் இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மைசூர் ராஜியத்தில் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி சரோஜா தேவி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா. தாய் ருத்ரம்மா. தந்தை காவல் அதிகாரி ஆவார். சரோஜா தேவியின் இயற்பெயர் ராதாதேவி. இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா். சரோஜா தேவி வீட்டின் நான்காவது மகளாக பிறந்தார். சிறுவயதிலேயே சரோஜா தேவியை பெற்றோர் நடனம் கற்றுக்கொள்ள ஊக்கு வித்தனர். பின்னாளில் அவர் நடிப்பு பயணத்தையும் தொடர அவரது தந்தை ஊக்குவித்தார். 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் சரோஜா தேவியுடன் திருமணம் நடந்தது. இந்திரா, கவுதம் ராமசந்திரன் என்ற பிள்ளைகள் உள்ளனர். கணவர் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
திரைப்பயணம்;
தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி, எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
1955ம் ஆண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.. இதையடுத்து திரை உலகிற்காக ராதா தேவி என்ற தன் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி கொண்டார். தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். 1960-70 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் கோலோச்சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட மொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் சரோஜா தேவி நடித்து இருந்தார்.
விருதுகள்
தமிழ் சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து மறக்க முடியாத பல வெற்றிப் படங்களை அளித்த சரோஜா தேவி "அன்னை இல்லம்," "நாடோடி மன்னன்," "பாகப்பிரிவினை," "திருவிளையாடல்" போன்ற படங்களில் அவரது பங்களிப்பு இன்றும் பேசப்படுகிறது. இவரது இயல்பான நடிப்பு, வசீகரமான புன்னகை மற்றும் கதாநாயகர்களுடன் இணக்கமான ஜோடிப் பொருத்தம் ஆகியவை அவரை ஒரு தலைமுறை ரசிகர்களின் கனவு நாயகியாக மாற்றின.
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவருக்கு, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. பல மாநில அரசுகளின் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சரோஜா மறைவுக்குத் திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.சரோஜா தேவியியின் கலைப் பங்களிப்பு என்றென்றும் சினிமா உலகம் நீடிக்கும் வரை நினைவுகூரப்படும்.