காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று ஏதுமில்லை - இயக்குநர் சேரன்

சேலத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது என்று தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-08 17:28 IST

சென்னை,

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இப்படம் பள்ளி, கல்லூரியின் கடந்தகாலக் காதல்களுடன் இளைஞர்களுக்கான உத்தேவகத்தை அளிக்கும் படமாக உருவாகியிருந்தது. வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம், 21 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 14 ம் தேதி ரீ-ரீலிஸ் செய்யப்பட்டது. ரீ-ரீலிஸிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சேலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார் எழுதிய 'கன்னக் குழியில் விழுந்த கண்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குனர்கள் சேரன்,கோபி நயினார், சிம்பு தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவிதை நூலினை பாடலாசிரியர் அறிவுமதி வெளியிட திரைப்பட இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநரும் நடிகருமான சேரன் பேசும்போது, “ஒரு பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்பது இல்லை. நாம் ஒரு உயிர் மேல் வைக்கும் அன்பு தான் காதல். பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது. காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று ஏதுமில்லை. சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல். நமக்கு இது கிடைக்கலையே.. நம்மால் இதுபோல காதலிக்க முடியலையே! என்று பொறாமைபடுபவர்கள்தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள், அதனால் அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்