இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
குழந்தை கிருஷ்ணர் சிலைக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.;
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை சார்பில், பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கீர்த்தனைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து குழந்தை கிருஷ்ணர் சிலைக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர், ‘கிருஷ்ணர் இருக்க பயமேன்' என்ற தலைப்பில் இயக்கத்தை சேர்ந்த குழந்தைகளால் சிறு நாடகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை குட்டி பத்மினி வழங்கி, பகவான் கிருஷ்ணரைப் பற்றி சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, பகவான் கிருஷ்ணருக்கு அலங்கார தரிசனம், ஆரத்தி நடந்தது.