சைவ சமயத்தின் முதல் குரு.. நந்தி எம்பெருமானின் சிறப்புகள்..!
எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர் நந்தி எம்பெருமான்.;
சிவ ஆலயங்களில் சிவபெருமான் முன்னே நந்தி எம்பெருமான் அமர்ந்திருப்பார். கயிலாயத்தின் வாயிற்காவலராக அமர்ந்திருக்கும் ஸ்ரீ நந்தி எம்பெருமான் மண்ணுலகில் அவதரித்த தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் அந்தணக்குறிச்சி என்னும் ஊர் என நம்பப்படுகிறது. திருவையாற்றில் துருவாச முனிவரின் மாணவராக இருந்த சிலாத முனிவர் என்பவருக்கும் சித்திரவதி என்ற பெண்ணிற்கும் மகனாக கிடைக்கப் பெற்றவர்.
குழந்தைப் பேறில்லாத சிலாத முனிவர் சிவபெருமானை மனதில் நினைத்து செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தின் பயனாகவும், சிவபெருமானின் அருட்கடாட்சத்தாலும் மகனாக பூமியில் இருந்து வந்தவர்.
இறைவனின் திருவருளால் ஸ்ரீ நந்தி எம்பெருமானை மகனாகப் பெற்ற சிலாத முனிவர் இவருக்கு வைத்த பெயர் ஜெபேசர். பெருந்தவம் புரிந்து பிறந்த ஜெபேசரின் எட்டாம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்று திருவையாற்றில் இருந்த மித்ரர், வருணர் என்னும் இரண்டு முனிவர்கள் கூறியதைக் கேள்வியுற்ற சிலாத முனிவர் மிகவும் மனம் வருந்தினார். தந்தையின் மன வருத்தம் அறிந்த ஜெபேசர் திருவையாற்றில் உள்ள சூர்யதீர்த்தக் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று சிவபெருமானை நோக்கி பத்து ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து இறைவனிடமிருந்து ஸ்ரீ நந்தி எம்பெருமான் என்ற பட்டமும் ஞான உபதேசமும் பெற்றார். மேலும் சைவ சமயத்திற்கு முதல் குருவாகவும் சிவசாரூபமும் சிவபெருமான் இவருக்கு தந்தருளினார். தேவதரிசனம் செய்ய வருவோர்க்கு அருள் வழங்கும் அதிகாரத்தையும் கொடுத்தார்.
இறைவனிடம் இருந்து ஸ்ரீ நந்தி எம்பெருமான் என்று பட்டம் பெற்ற இவர் தனது திருமண வயதில், திருமழபாடியில் பிறந்த வியாக்கிரபாதர் என்பவரின் மகள் சுயம்பிரபை என்ற பெயர் கொண்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டார். சுயஜ்ஜை என்ற பெயரும் இந்த பெண்ணிற்கு உண்டு. ஸ்ரீ நந்தி எம்பெருமான் சுயம்பிரபை இருவரின் திருமணம் தஞ்சாவூர் மாவட்டம் திருமழபாடியில் நடைபெற்றது. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவையாற்றில் இருந்த பஞ்சநதீஸ்வரர் என்பவர் இவரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
நந்தி என்ற சொல்லுக்கு எப்பொழுதும் ஆனந்தநிலையில் இருப்பவர் என்று பொருள்படும். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாயந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர்.
ஐந்தெழுத்தாம் சிவாயநம என்னும் உருவத்தைக் கொண்டவர். பக்தியில் சிவபெருமானுக்கு சமமானவர். பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பூஜிக்கத்தக்கவர்களில் முதல்வர் அனைவருக்கும் சிறந்தவர்.
எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். ஸ்ரீ நந்தி எம்பெருமான் இறைவனிடத்தில் (சிவனிடத்தில்) சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்கியவர். அதனால் தான் பிரதோஷ காலத்தில் ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது.
சிவதரிசனத்தில் முதலாவதாக செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதும் ஸ்ரீ நந்தி எம்பெருமானை தரிசிப்பது ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது நம் வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்கு தகுந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றி வைப்பார் என்பதால் தான்.
ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு திவ்விய வடிவமும் நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பும் உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானையுரியும், இருபுயங்களில் மானும் மழுவும் உண்டு. மான் வேகத்தைக் குறிக்கிறது, மழு வீரத்தைக் குறிக்கிறது என்பர். எல்லா உயிர்களையும் ஒருகாலத்தில் ஓய்வுபடுத்துதல் மகாசங்காரம் எனப்படும் இந்த அதிகாரம் நந்தி எம்பெருமானுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம்பவம் அறுத்த நம் நந்தி வானவன் என்றதால் ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிவனிடத்தில் இருந்து சிவ ஆகமங்களைத் தெரிந்து மக்களுக்கு அருளினார் என்பர். தவறு செய்தாரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவர் சிவசந்நிதியில் காவல் பூண்டுள்ளார். இவரின் அனுமதி பெற்றுத்தான் சிவபெருமானை வணங்க வேண்டும்.
ஸ்ரீ நந்தி எம்பெருமான் தக்க்ஷயாகத்தில் பழித்துப் பேசிய தக்க்ஷனையும் உடனிருந்த தேவர்களையும் சபித்தார். ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிவயோகத்தில் மிக வல்லவர். திருக்கைலாயத்தில் திருமந்திரம் என்னும் நூலை எழுதிய திருமூலருக்கு ஸ்ரீ நந்தி எம்பெருமான் ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளினார். அதன் பின் திருமூலர் பூலோகத்திற்கு வந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகம் புரிந்தார்.
திருமூலர் தான் எழுதிய திருமந்திரம் என்னும் நூலில் ஸ்ரீ நந்தி எம்பெருமானை சைவ சமயத்திற்கு தனி நாயகன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் சிவபெருமானின் சீடர்களில் முதல்நிலை உடையவர் என்றும் அவரால்தான் நான் ஆசிரியன் ஆனேன் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சணற்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர் என்ற பெயர்களைக் கொண்ட ஏழு பேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் வருகின்றார்.
ஸ்ரீ நந்தி எம்பெருமானின் மாணவர்களாக விளங்கிய மேற்குறித்த எட்டு பேர்களும் சைவ சமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டினை பரப்பவும் சிவபரம் பொருளின் பெருமையைப் பற்றியும், ஸ்ரீ நந்தி எம்பெருமானின் மரபினைப் பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்து சொல்ல நமது நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.
ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிவபெருமானிடத்தில் உபதேசம் பெற்றவராதலால் இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தெரிசனிகளும், சத்தியஞான தெரிசனிகளிடமிருந்து மெய்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இது ஒரு குருப்பரம்பரை அல்லது திருக்கைலாயப் பரம்பரை எனக்கூறப்படும்.
ருத்திரன், துாயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்யப் ப்ரியன், சிவவாஹனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் போன்றவை ஸ்ரீ நந்தி எம்பெருமானின் இயற்பெயர்கள்.
ஸ்ரீ நந்தி எம்பெருமானை விடைரூபமாக தமிழக மக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வணங்கியதற்கான சான்றுகள் பல உள்ளன.
பிரதோஷகாலத்தில் ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிவபெருமானுக்கு இணையாக வணங்கப்படுகின்றார். எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய ஸ்ரீ நந்தி எம்பெருமானை ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் சிவபெருமானை வணங்குவதற்கு முன்பு வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.
-N.செந்தில், வேந்தன்பட்டி