உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
பஸ் விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி - ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 13 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.