புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், புதுச்சேரிக்கு 3 நாள் அரசு பயணமாக இன்று மதியம் வந்தடைந்தார்.;
கோப்புப்படம்
புதுச்சேரி,
டெல்லியில் இருந்து புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு மூன்று நாள் பயணமாக இன்று மதியம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வந்தடைந்தார். அவரை துணைநிலை கவர்னர் கைலாஷ் நாதன், முதல்-மந்திரி ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெகதீப் தன்கர், கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை" என்ற நிகழ்ச்சி நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றுகிறார்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக, இந்திய துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் புதுச்சேரிக்கு வருகை தருவதை முன்னிட்டு, புதுச்சேரி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு (திங்கட்கிழமை) நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.