‘எங்கள் குடும்ப பிரச்சினை குறித்து விசாரியுங்கள்’ பிரதமருக்கு, லாலு பிரசாத் மூத்த மகன் கோரிக்கை
எந்த சூழ்நிலையிலும் எங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று லாலுவின் மூத்த மகன் கூறியுள்ளார்.;
பாட்னா,
பீகார் தேர்தல் முடிவு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிக்கு பேரிடியைத் தந்ததுடன், குடும்பத்திலும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, தான் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி அரசியலைவிட்டும், குடும்பத்தைவிட்டும் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்ற 3 சகோதரிகளும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் சகோதரி ரோகிணிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
“எந்த சூழ்நிலையிலும் எங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். சிலர், ஜெய்சந்த்கள் (துரோகிகள்). அவர்கள் என் பெற்றோரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தத்தில் வைத்திருக்க முயற்சிப்பதாக தெரிகிறது. தேர்தல் டிக்கெட் வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. இது என் குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, கட்சியின் ஆன்மாவுக்கே பேரிடியாகும்.
இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற, கடுமையான மற்றும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர், அமித்ஷா ஜி மற்றும் பீகார் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தனது ஜனசக்தி ஜனதா தளத்தின் கணக்கிலிருந்து வலைத்தள பதிவில் கூறி உள்ளார்.