'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.;
புதுடெல்லி,
நீட் (NEET) என அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு "நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி" (National Testing Agency) எனும் அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மருத்துவத்துறையில் பட்டப்படிப்பில் சேர்வதற்கு மிகமுக்கியமான தேர்வாக கருதப்படுகிறது.
குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., (MBBS- Bachelor of Medicine and Bachelor of Surgery), பி.டி.எஸ்., (BDS Bachelor of Dental Surgery),பி.ஏ.எம்.எஸ்., (Bachelor of Ayurvedic Medicine and Surgery) பி.எஸ்.எம்.எஸ்., (Bachelor of Siddha Medicine and Surgery),பி.யு.எம்.எஸ்., (Bachelor of Unani Medicine and Surgery) பி.ஹெச்.எம்.எஸ்., (Bachelor of Homeopathic Medicine and Surgery) போன்ற பட்டப்படிப்புகளில் சேர இந்த தேர்வு எழுதவேண்டியது அவசியமாகும்.
மேலும், 2025-ம் ஆண்டு ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர விரும்பும் MNS (ராணுவ நர்சிங் சேவை) ஆர்வலர்களும் NEET (UG)க்கு தகுதி பெற வேண்டும். நான்கு ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான தேர்வுக்கான குறுகிய பட்டியலுக்கு NEET (UG) மதிப்பெண் பயன்படுத்தப்படும்.
தேர்வு எழுத தேவையான தகுதிகள்
1.பிளஸ்-2 படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/பயோடெக்னாலஜி, பாடங்கள் படித்திருக்கவேண்டியது அவசியம் ஆகும்.
2. இந்தப்பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
3. எஸ்.சி.,எஸ்.டி.,மற்றும் ஓபிசி.,பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்களில்10 சதவீதம் தளர்வு உண்டு.
4. நீட்நுழைவுதேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிடவில்லை. எந்தவயதிலும் இந்த தேர்வு எழுதலாம்.
தேசிய அளவில் நடத்தப்படும் நீட் என்னும் நுழைவுதேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறிப்பாக, மே மாதம் இந்த தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம் (English), இந்தி (Hindi), அசாமி (Assamese), பெங்காலி (Bengali), குஜராத்தி (Gujarati), கன்னடம் (Kannada), மலையாளம் (Malayalam),மராத்தி (Marathi), ஒடியா (Odia),பஞ்சாபி ( Punjabi), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu) மற்றும் உருது (Urdu) ஆகிய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும்.
இதனிடையே தேசிய மருத்துவ ஆணையம் (NMC) முன்னர் தெரிவித்தபடி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது NEET (UG)-2025, பேனா மற்றும் காகித முறையில் (OMR அடிப்படையில்) ஒரே நாளில், ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்திருந்தது.
இந்த சூழலில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படப்படுகிறது.