மீனவர் மீது தாக்குதல்

புதுவையில் மீனவரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-07 16:59 GMT

புதுச்சேரி

உப்பளம் திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 28). மீனவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு அசோக் தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகியோருடன் அங்குள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முத்து, ஸ்ரீகாந்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை அசோக் சமாதானம் செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து முத்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது ஆதரவாளர்களை வரவழைத்தார். அதன்படி அங்கு வந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகியோர் கீழே கிடந்த கல்லை எடுத்து அசோக்கின் தலை, முகத்தில் தாக்கினர். மேலும் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். தடுக்க முயன்ற ஸ்ரீகாந்த், விக்னேசும் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் முத்து, ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்