‘திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வது அவசரத் தேவை’ - கி.வீரமணி
தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை தொடங்க திட்டமிடுகின்றனர் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, இந்துத்துவா – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை தொடங்க திட்டமிடுகின்றனர்.
''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குரலெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அவர், திருச்சியில் பேசியபோது, ''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் இந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளார். எனவே, இந்த அரசியல் எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன் மூலம் புரிகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில், ஐகோர்ட்டு மதுரைக் கிளை நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும். மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும். எனவே, சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வது அவசரத் தேவையாகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.