பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு மதிப்பெண்கள் மூலம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;
சென்னை,
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு;
1.கலைஞர் கனவு இல்லம்
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி இருக்கக்கூடிய நிலையில, மேலும் புதிதாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
2. சாலைகள் மேம்பாடு
கிராமப்புற பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்குகிற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற 'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8,911 கோடி ரூபாய் மதிப்பில 20,484 கிலோமீட்டர் நீளம் உள்ள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டுல சுமார் 2,200 கிலோமீட்டர் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
3.ஓய்வூதியம்
ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களை பாதுகாக்கும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 33 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலே, கூடுதலாக 1 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் 4.2.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
3. சத்துணவு பணியாளர்கள்
* இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்த சாதனையின் தொடர்ச்சியாக, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,200 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்து விட்டால், அவங்க குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியமாக 1,200 ரூபாயும், மேலும் சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்து விட்டால் அவங்க குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியமாக 1,000 ரூபாயும் வழங்கப்படும்.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் மேற்குறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக 20,000 ரூபாய் வழங்கப்படும். இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
4. பகுதி நேர ஆசிரியர்கள்
அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறைக் காலமான மே மாசத்துல அவங்க கோரிய ஊதியம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
* அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவங்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.