கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து திருட்டு - 5 வீடுகளில் 30 பவுன் நகை கொள்ளை
5 வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.;
கிருஷ்ணகிரி,
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலை முதலே தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரார்த்தனைக்கு சென்றவர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 5 வீடுகளின் கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மொத்தம் 30 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், கைரேகை மாதிரிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.