'வாரிசு' அரசியலை எதிர்த்து 'கில்லி'யாக வெற்றி கண்டவர் - விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஜய்க்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.
இந்த நிலையில், விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"நாளைய தீர்ப்பு" -இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்ததால் தனக்கு வந்த இன்னல்களில் இருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்", "ஜன நாயகன்" தம்பி விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.