தேனி: காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் காட்டு மாடு தாக்கியதில் வனக்காவலர் உயிரிழந்தார்;

Update:2025-03-23 18:36 IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள உப்புதுறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பன் (48 வயது). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வனச்சரகத்தில் வனக்காவலராக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். வருசநாடு மலைப்பகுதியை ஒட்டியுள்ள சாத்தூர் வனச்சரக பகுதிகளில், வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சின்ன கருப்பன் தினமும் ரோந்து பணிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்ன கருப்பன், வனத்துறை அதிகாரிகளுடன் கோட்டை மலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு மாடு ஒன்று வனத்துறையினரை துரத்தியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சிதறி ஓடினர்.

அப்போது வனக்காவலர் சின்ன கருப்பனை காட்டு மாடு கீழே தள்ளி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சின்ன கருப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்