தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி

ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகிலுள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தனது மகள்களின் வீடுகளுக்கு செல்ல முயன்றார்.;

Update:2025-06-15 13:16 IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். ஈஸ்வரி தனது மகனுடன் வசித்து வந்தார். 2 மகள்களும் தண்டவாளத்தின் மறுபுறத்தில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் ஈஸ்வரி அடிக்கடி மகள்களின் வீடுகளுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஈஸ்வரி பெருமாள்புரத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மகள்களின் வீடுகளுக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஈஸ்வரி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே ரெயிலை டிரைவர் நிறுத்திவிட்டு, ஆறுமுகநேரி ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து ஆறுமுகநேரி போலீசார் விரைந்து சென்று, இறந்த ஈஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் ரயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இறந்த ஈஸ்வரியின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்