சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.;

Update:2025-06-21 07:31 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசின் 2023-24-க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அகில இந்திய சிவில் சர்வீசஸ் பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் பயின்று வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, 2025-ம் ஆண்டின் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.25 ஆயிரம் நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc-registration/ என்ற இணையதளத்தில் 21-ந்தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்