தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.;
சென்னை,
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை (சனிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரையில் 13 செ.மீ., தல்லாகுளம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூர், கரூர் மாவட்டம் கடவூரில் 9 செ.மீ., திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, பொன்மலை, மதுரை மாவட்டம் புலிப்பட்டி, பெரியபட்டியில் தலா 8 செ.மீ, பெரம்பலூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.